இலங்கை – துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

இலங்கை மற்றும் துருக்கி குடியரசுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள் கடந்த 05ஆம் திகதி துருக்கியின் அங்காராவில் வெற்றிகரமாக நடைபெற்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்டக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வர்த்தக ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக மருந்து உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அத்துடன், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இஸ்தான்புல் மற்றும் கொழும்பு இடையிலான நேரடி விமானத் தொடர்புகளைப் பயன்படுத்தி நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் நிலுவையிலுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவில் இறுதி செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், அண்மையில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியைத் தொடர்ந்து துருக்கி வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்தது. அத்துடன், மீள்நிர்மாணப் பணிகளில் துருக்கியின் மேலதிக பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இணைந்து செயற்படவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் துருக்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகம் தூதுவர் சிஹாத் எர்கினே ஆகியோர் தலைமை தாங்கினர்.

இலங்கை தரப்பில் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் நிலுக கதுருகமுவ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இச்சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.