76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77வது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை (30) எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய ஒற்றைத் தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களின் உரிமைகளைக் கத்தரித்து, உயர்மட்ட வர்த்தக சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றவே உருவாக்கப்பட்டுள்ளதாகச் சாடினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கத் தவறியுள்ளதோடு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் காவலன் எனக் கூறிக்கொண்ட ஜனாதிபதி இன்று செல்வந்தர்களின் ஒரு கைப்பாவையாக மாறியுள்ளதாகவும், அரசாங்கத்தின் இத்தகைய போக்கினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிற்கு மக்களைத் திரட்டும் பலம் இல்லாத காரணத்தினால், வழமையான பொய்களைக் கூறி கிராம மட்டங்களில் சிறிய மே தினக் கூட்டங்களை நடத்த அரசாங்கம் முற்படுவதாகவும், இந்த மே தினம் தேசிய மக்கள் சக்திக்கு உரிய ஒன்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளமை குறித்து அரசாங்கம் எவ்விதப் பொறுப்பும் கூறவில்லை எனத் தெரிவித்த மகேஷ் சேனாநாயக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல்களை ஐக்கிய மக்கள் சக்தியே முதலில் வெளிப்படுத்தியதாக நினைவு கூர்ந்தார். முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எரான் விக்கிரமரத்ன மீது விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி, இறுதியில் கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைக்க சஜித்தின் நிபுணரான எரானையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் எள்ளி நகையாடினார்.



