போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்ச் சூழலுக்கு மத்தியில் ஒரு முக்கிய திருப்பமாக, அமெரிக்காவிற்கான லெபனான் மற்றும் இஸ்ரேலிய தூதுவர்கள் தொலைபேசி ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக இடம்பெற்ற முதலாவது தொடர்பாடலாக இது கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் அமெரிக்காவில் உத்தியோகபூர்வ போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.