இத்தாலியில் இலங்கைச் சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றும் பணிகள் இன்று ஆரம்பம்: தூதரகம் விசேட அறிவிப்பு!

இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைப் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய அனுமதிப்பத்திரங்களாக மாற்றும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் ஆரம்பமாகின்றன.

 உரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் இது தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில்,

விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய திகதிகள் சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்களைப் பொறுப்பேற்பதற்காக மாத்திரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களிலும் தூதரகத்தின் ஏனைய தூதரகச் சேவைகள்  இடைநிறுத்தப்படுவதுடன், அவசரத் தேவைகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை வினைத்திறனாகக் கையாளுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தற்காலிக மாற்றத்திற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தூதரகம் கோரியுள்ளது.