ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் Shinjirō Koizumi இடையே டோக்கியோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது. இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free and Open Indo-Pacific” என்ற கண்ணோட்டத்தின் கீழ் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியமென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கிய புவியியல் அமைப்பையும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார். சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள் மற்றும் ராஜதந்திர நடைமுறைகளை மதித்து, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான துறைகளில் ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் இரு தரப்பின்னரும் மத்திய கிழக்கு நிலைமைகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் வரவேற்றன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், இலங்கையின் அணிசேரா நடுநிலை மற்றும் பக்கச் சார்பற்ற வெளிநாட்டு கொள்கையையும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்ட உடன்படிக்கைகளுக்கு உள்ள உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின்(JMSDF) Destroyer JS Onami கப்பலின் அண்மைய கொழும்பு துறைமுக வருகையும், இலங்கை கடற்படையுடன் நடைபெற்ற கடற்படை பயிற்சி தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உரையாடலை தொடர்ந்து முன்னெடுக்க இருதரப்பும் உடன்பட்டதுடன், இணைந்த கடற்படை பயிற்சிகள், கப்பல் வருகைகள் மற்றும் பணியாளர் பங்கேற்பு போன்ற வழிகளால் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
மேலும், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் (HADR) தொடர்பான திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், ஜப்பான் தேசிய பாதுகாப்பு கலாசாலை (NDA) ஊடாக பயிற்சி வாய்ப்புகள் உட்பட பணியாளர் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் ஆகியனவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இச்சந்திப்பின் போது, சமீபத்திய ‘டிட்வா’ சூறாவளியின் போது வழங்கப்பட்ட உதவிகள் உட்பட, ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவு மற்றும் உதவிகளுக்கு இலங்கையின் நன்றியை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடந்த அனர்த்த காலங்களின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கும், இலங்கையின் மீட்பு திறனை மேம்படுத்துவதற்கான தொடர்ந்த பங்களிப்புகளுக்கும் அவர் மேலும் நன்றி தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு கப்பல்கள் வழங்குதல், திறன் மேம்பாட்டு உதவிகள் மற்றும் வானிலை ஆய்வு துறைக்கான மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவு, பல பில்லியன் ரூபாய் மதிப்புடைய டொப்ளர் ரேடார் அமைப்பு நிறுவுதல் உள்ளிட்ட துறைகளில் ஜப்பானின் முக்கிய பங்களிப்பையும் அவர் எடுத்துக்காட்டினார்.
தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டிய அவர், வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேலும் வலுப்படுத்த மேலும் உதவிகளையும் கோரினார்.



