வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சரின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (1) நடைபெற்றது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் தமக்கான முதலீட்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் இன்றும் பல அதிகாரத்துவச் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் செயன்முறையை நாம் விரைவுபடுத்தாவிட்டால், முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் மற்றும் தடைகள் இயலுமான வரை விரைவாகக் களையப்பட வேண்டும்.
சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலகட்டத்தில், அவர்கள் மீளத் திரும்புவதற்கு முன்னதாகவே எவ்வித களநிலை ஆய்வுகளோ அல்லது மக்கள் கலந்துரையாடல்களோ இன்றி, வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் மக்களின் காணிகள் இத்திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்குத் தீர்வு காணும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தச் செயன்முறைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.



