உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு  நாள் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.   இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது.” எனக்குறிப்பிட்டுள்ளார்.