பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வேண்டுகோளுக்கிணங்க மலையகத்தின் எதிர்கால கல்வி மற்றும் பாடசாலை காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள், அடிப்படை வசதிகள்,பெளதீக வளங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (19) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய முதல் தடவையாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, அம்பிகா சாமுவேல், ரவீந்திர பண்டார, அனுஷ்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் காணி பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. பெருந்தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அது தொடர்பாக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்ததுடன் மலையகத்தில் காணப்படும் 864 பாடசாலைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை ஒன்றினை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இந்த அறிக்கையில் மலையக பாடசாலைகளில் காணப்படும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பான ஒரு மதிப்பீடு செய்து தனக்கு வழங்குமாறு குறிப்பிட்ட பிரதமர், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டங்களைத் தீட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கணித விஞ்ஞான பாடங்களை மேம்படுத்தல், பௌதிக வளப்பற்றாக்குறைகளை சரிசெய்தல், விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்தல், அதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விளையாட்டுத்துறை சார்ந்த ஓர் தமிழ் மொழி மூலமான பாடசாலை உருவாக்குதல், மாவட்டங்களில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களில் மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு ஒன்றினை உருவாக்குதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டு ஒரு சுமுகமான தீர்வும் எட்டப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



