குற்றவாளிகள் தம்மைத்தாமே விசாரிக்கும் அவலம்…

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது.

வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு, அவர்கள் கட்டளையை மீறிச் சென்றால் வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையைத்தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியைச் சுட்டு கொல்ல முடியாது.

வாகனத்தில் மாட்டின் சாணகம் இருந்ததாகப் பொலிஸார் காண்பித்தமையைப் பார்த்த வேளை, அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணகம் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளமையால்தான் இவ்வாறான செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றனர். அவசரகாலச் சட்டம் ஊடாகப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதனூடாகவே கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்தனர்.

ஒரு குற்றவாளியாக இருந்தாலும் பொலிஸார் சுட்டுப் படுகொலை செய்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் எங்கள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துரதிஷ்டவசமான நிலைமை காணப்படுகின்றது. குற்றம் செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரே இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” – என்றார்.