முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியை நேற்று (24) நடைபெற்றது. இதன்போது சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து, அவர் கல்வி கற்ற பாடசாலை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்போது, தனது நண்பியின் பூதவுடல் ஏந்திய பேழையை அவரது நண்பிகளான மாணவிகள் மாத்திரம் தூக்கிச் சென்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முன்னதாக, முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் உணவு ஒவ்வாமையால் சுகவீனமுற்ற 12 வயது சிறுமி கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாகவும், உரிய மருத்துவம் மேற்கொள்ளாமையாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மக்களின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமா சங்கரை பதிலளிக்கையில், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மாத்திரமே தனக்கு அறிக்கையிடப்பட்டதாகவும், அதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கமைய, நிபுணர்களின் விசாரணை நாளை (26) ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமா சங்கர் குறிப்பிட்டார்.



