ஒருமைப்பாடும், தொடர் உதவிகளுமே இலங்கைக்கு அவசியம்: ஐ.நா

தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தித்வா’ சூறாவளியின் விளைவாகக் கடந்த வெள்ளிக்கிழமை மிகமோசமான மண்சரிவு மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு என்பன பதிவான நிலையில், நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்காக அண்மைய அனர்த்தம் கருதப்படுகிறது.

இவ்வனர்த்தத்தினால் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், காணாமல்போயும் இருப்பதுடன் இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் மிகநெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஊடாக உள்நாட்டு மனிதாபிமான உதவிக்குழு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதுடன் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் கிளை அலுவலகத்தின் அனுசரணையுடன் கூட்டு உதவித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு உணவு, தூய குடிநீர், சுகாதார மற்றும் தங்குமிட வசதிகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு அவசியமான பொருட்கள் உள்ளிட்ட உடனடி அத்தியாவசியத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏதுவான வகையில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் துரிதமாக இயங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி ஐ.நா அலுவலகம் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து உதவிகள் தேவைப்படுவோரை அடையாளங்காண்பதற்கான கூட்டு மதிப்பாய்வையும் முன்னெடுத்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே, ‘தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும். எனவே பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீட்சியை நோக்கிப் பயணிப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உதவமுடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.