திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக மொத்தமாக 22,232 குடும்பங்களை சேர்ந்த 72,254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (01) வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17,004 குடும்பங்களை சேர்ந்த 56,479 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.61பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 5,228 குடும்பங்களை சேர்ந்த 15,775 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 519 குடும்பங்களை சேர்ந்த 1,844 நபர்களும், தம்பலகாமம் 448 குடும்பங்களை சேர்ந்த 1,373 நபர்களும்,மொறவெவ 129 குடும்பங்களை சேர்ந்த 403 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2,287 நபர்களும், வெருகல் 1,745 குடும்பங்களை சேர்ந்த 5210 நபர்களும்,மூதூர் 6,941 குடும்பங்களை சேர்ந்த 22,378 நபர்களும்,கிண்ணியா 4,932 குடும்பங்களை சேர்ந்த 16,339 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 391 குடும்பங்களை சேர்ந்த 1,242 நபர்களும், குச்சவெளி 5,732 குடும்பங்களை சேர்ந்த 19,255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.



