இலங்கைக்கு சர்வதேச அவசர உதவிக் குழுவை அனுப்பிய ஜப்பான்!

இலங்கையில் சூறாவளி பாதிப்புகளுக்குப் பதிலளிக்க சர்வதேச அவசர உதவிக் குழுவை ஜப்பான் அனுப்புகிறது.

இலங்கை ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் அரசு ஒரு சர்வதேச அவசர உதவிக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) அனுப்பிய மதிப்பீட்டுக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளின் மருத்துவத் தேவைகள் மற்றும் பிற அவசர தேவைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் JICA-வில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சர்வதேச அவசர உதவிக் குழு இம் மாதம் 3 ஆம் திகதி ஜப்பானிலிருந்து இலங்கைக்குப் புறப்பட உள்ளது.

ஜப்பானின் மனிதாபிமானக் கொள்கைகள் மற்றும் இலங்கையுடன் கொண்டுள்ள நீண்டநாள் நட்பு உறவை முன்னிறுத்தி, மருத்துவக் குழு இத்தகைய விரைவான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த உதவிக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சிகிச்சை, மருத்துவ உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.