போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்கானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நடத்துவதற்கு கடந்த 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும் அவ்வாறுதான். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும், அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூற அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவு தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
நாங்கள் உங்கள் மீது முன்வைத்த விமர்சனக் கணைகளையே எம்மை நோக்கி மீள செலுத்த வேண்டாம். புதிய ஆயுதம் என்பது, எம்மைவிட சிறந்த திட்டங்கள் அவசியம் என்பதாகும். எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்நிலையில், தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.



