ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மீளாய்வுக் கூட்டம்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு  கூட்டம்  செவ்வாய்க்கிழமை (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஆராய்வது, செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் தடைகளை அடையாளம் காண்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக தேவையான கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பது போன்றவற்றை நோக்காகக் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மையக் காரணியாக உள்ள டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் என்று ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

மேலும், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கையாள்பவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. “கிராமத்துக்கு தொடர்பாடல்” திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 500 கோபுரங்களை நிறுவும் இலக்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.