போதைப்பொருள் நடத்தைகளால் அதிகரிக்கும் பாலியல் தொற்றுகள்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் ஒரு லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைபொருள் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் எச்.ஐ.வி. மற்றும் ஏனைய பாலியல் ரீதியான நோய்கள் அதிகரிக்கக்கூடும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சின்கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 27,511 பேர் அதிக ஆபத்துள்ள பாலியல் நோய் நிலைமைகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், போதை மருந்துகளைச் செலுத்துபவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் தற்போது சுமார் 6 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.த் தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர் எனத் தரவுகள் கூறுகின்றன. பெரும்பாலும் மேல் மாகாணத்திலும் காலி, கண்டி, குருநாகல், அநுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இருந்தும் அதிக தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டில் 39,547 நபர்கள் எச்.ஐ.வி. தொற்றுக் குள்ளாகியுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 5,700 பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தாண்டு இதுவரை 10 எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் பாடசாலைகள் முதலே பாலியல் கல்வியின் அவசியத்தையும் பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.