பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டி உரிய பாதுகாப்புகோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

எனவே இந்த விடயத்தை பிரதானக் காரணமாகக் கொண்டே மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரேம்நாத் தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைப்பலம் எதிர்க்கட்சிவசம் இல்லாதபோதும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவும், நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையினைச் சுட்டிக்காட்டவும் இப்பிரேரணையை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சில எதிரணி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்குரிய நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே ஆரம்பித்திருந்தமை யும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.