இலங்கை தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் விரைவில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நவம்பர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு முன்னர் இணக்கம் காணப்பட்ட போதிலும், வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் அன்றைய தினம் நாட்டிற்கு விஜயம் செய்வதாலும், இரு நாடுகளுக்கிடையில் பல இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவுள்ளதாலும், அது தொடர்பான விவாதத்திற்கு வேறொரு திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது குறித்த விவாதத்திற்கான நேரத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இல்லையேல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் விவாதித்து வேறு திகதியை நிர்ணயம் செய்யலாம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடி திகதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதன்போது குறிப்பிட்டார்.