நீதிமன்ற விடயங்களை ஊடகங்களில் வெளியிடத் தடை!

நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை டிஜிட்டல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டால், பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் சட்ட வழக்குகளுடன் தொடர்புடைய பிற காட்சிகளை வெளியிடுவது குறித்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஏஐயை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் போதைபொருள் கடத்தலுக்கு துணை போவதாக அமைவதால் சட்டவிரோத நடவடிக்கைகளில் உள்ளடங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஒரு குடிமகனின் எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறும் அல்லது கட்டுப்படுத்தும் வடிவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.