2029 ல் அரச தரப்பு எம்.பி.க்கள் 159 பேரும் சிறையில் போடப்படுவார்கள்: உதய கம்மன்பில எச்சரிக்கை

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) கொடுப்பனவுகளை அரசாங்கம் கையாள்வது குறித்து இன்று கடுமையாக விமர்சித்தார்.

அதிகாரபூர்வ நோக்கங்களுக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, அரசியல் கட்சி நிதிக்காக நன்கொடையாக வழங்குவது சட்டப்படி குற்றம், என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்கள் கொடுப்பனவுகளை கட்சிப் பணிகளுக்கு வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு பதிலளித்த கம்மன்பில, ஒருவரின் சம்பளத்தைச் செலவழிப்பதற்கும், பொது கொடுப்பனவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்று விளக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த வருமானத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், அலுவலகம், எரிபொருள், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவற்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், நோக்கம் கொண்ட பொதுப் பணிக்காக மட்டுமே கண்டிப்பாகச் செலவிடப்பட வேண்டும்.

வாடகை, மின்சாரம் அல்லது உபகரணங்கள் போன்ற அலுவலகப் பராமரிப்புக்காகக் கொடுக்கப்படும் நிதியை ஒரு கட்சிக்குக் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்வது, பொதுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்,என்று அவர் மேலும் கூறினார். இத்தகைய செயல்கள் “பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் (misappropriation of public property),” இது பிணையில் வெளிவர முடியாத குற்றம் என்றும் கம்மன்பில எச்சரித்தார்.

இந்த அரசு பணத்தை தவறாகப் பயன்படுத்தும் 159 அரச தரப்பு உறுப்பினர்களும் ஒரு தீவிரமான குற்றத்தைச் செய்கிறார்கள். அடுத்த அரசாங்கத்தின் கீழ், வெலிக்கடை சிறையில் அவர்களுக்காகவே ஒரு முழு வார்டு ஒதுக்கப்பட வேண்டி வரும்,என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.