மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கு சர்வதேசத்தால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சரத் பொன்சேகாவுக்குத் தடைகள் விதிக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் கூறியதை அவதானித்தேன். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அமெரிக்காவால் முதன்முதலில் எனக்குத்தான் தடைகள் விதிக்கப்பட்டன.
இந்தத் தடைகள் காரணமாக, நான் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. ஆனால், ராஜபக்சக்களுக்கு எந்த தடைகளும் இல்லை. அவர்கள் சுதந்திரமாக அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர். அத்துடன், கரன்னகொட போன்று இழிவான செயல்களில் நான் ஈடுபடவில்லை. மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தது கரன்னகொட என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஒன்றாகும் .
எனவே, அத்தகைய நபர்களுக்கு பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மட்டும் போதாது. அவர்கள் சிறைகளில் இருக்க வேண்டியவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.