தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு ஆரம்பம்

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 78வது உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகிறது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று 13ஆம் திகதியில் இருந்து புதன்கிழமை 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குநர் டாக்டர் கத்தரினா போஹ்மே, எட்டு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் இரண்டு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் பிற WHO நிபுணர்கள் இந்த அமர்வில் பங்கேற்கின்றனர்.

வலுவான ஆரம்ப சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான முதுமைகால வாழ்க்கை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு எதிர்த்துப் போராடுவது ஆகியவை எழுபத்தெட்டாவது பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் கலந்துரையாடும் முக்கிய விடயங்களாக அமையும்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார நிதியை விரிவுபடுத்துவது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் விரிவான கலந்துரையாடல்களை நிகழ்த்தி முடிவுகளை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய மாநாடு முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் மற்றும் முன்னைய ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதையே பிரதான நோக்கங்களாக கொண்டுள்ளது.