புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
நேற்றைய (10.10) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய பாடமாக்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகாலமாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. குடியுரிமை கல்வி பாடத்தை பெயர் மாற்றம் செய்து அதனை அடிப்படை சட்டம் மற்றும் குடியுரிமை கல்வி என்று அறிமுகப்படுத்தும் யோசனையை ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
2026 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை கல்வியில் அடிப்படை சட்டத்தை பிரதான பகுதியாக உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சமயம் ஆகிய பாடங்களை தேவைக்காக கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்க்கையில் சகல பகுதிகளுடனும் தொடர்புடைய சட்டத்தை கற்பதில்லை.
சட்டத்தை கற்பது சட்டமாக்கப்பட வேண்டும்.சட்டம் தெரியாது என்று குறிப்பிடுவது விடுவிப்புக்கான ஒரு காரணியாக கருதப்படமாட்டாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்