இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா.வில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று (6) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் இந்த தீர்மானத்துக்கு, இன்று அதனை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலதிகமாக 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன.