புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் தான் நிறைவடைந்துள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள்’. ‘அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.