வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகள் அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.