தமிழகத்தின் கரூர் மாவட்டம் – வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியற்பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘சனத்திரட்சியில் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது’ என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மிகக்குறிப்பாக, புகுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினதும், விஜய் அவர்களினதும் அரசியல் பயணம், துயரமும் – கனதியும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்
இழப்பின் வலிகளையும் – ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் – தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக பிரார்த்தனைகளும்’ என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.