ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா (Marcelo Rebelo de Sousa) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் புதன்கிழமை (24) நடைபெற்றன.
இதன்போது இலங்கைக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்றன.
இதன் போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியவிற்கு இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இதன்போது கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதன்போது, இலங்கை-பாகிஸ்தான் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.






