‘செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்: ஐ.நா-வில் ஜனாதிபதி உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.  இது பதவிக்கு வந்த பின்னர் அவர் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது உரை ஆகும்.

அமைதி, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தி அவர் தனது உரையில் பல்வேறு முக்கிய விடயங்களை எடுத்துரைத்தார்.

உலகளாவிய வறுமை, ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

காசா பகுதியில் தொடர்ந்து நிகழும் மனிதாபிமானப் பேரழிவு குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மேலும், உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்றும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாலஸ்தீனத்திற்கான தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஊழலை ஒரு ‘தொற்றுநோய்’ என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இது அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகக் கூறினார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

தனது உரையில், ‘துன்பத்திலிருந்தும் இருளிலிருந்தும் விடுபட்டு, செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழலற்ற, நீதிமிக்க ஆட்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், கோடிக்கணக்கான டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த உரையின் மூலம், உலகளாவிய அரங்கில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.