திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.