அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடன் அவர்களின் உறவுகள் வெளியே வந்ததாகவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை கண்டி – போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மகளை தந்தையான ஆனந்த சுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்று கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மீதமாக உள்ள அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாகவும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.