கூட்டு எதிரணியாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியை சந்தித்த போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறது.
தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.  தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசாங்கம் எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடக பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகிறது.
அரசாங்கம் மாத்திரமின்றி பாராளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.

அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா? என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் விடயத்திலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் தாமதப்படுத்தாது வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும்.
எனவே ஆளுனர்களால் அவற்றை தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது. அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வருடக் கணக்கில் ஆளுனர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும்.
எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலைக் கண்டு எதற்காக அஞ்சுகின்றனர்? இத்தேர்தல் நடத்தப்பட்டால்அரசாங்கத்துக்குள் உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.