இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விசா ஆலோசகராகப் பணிபுரிகிறார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் இந்தியாவிற்குள் சதி வேலைகளைச் செய்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் (Mohammed Sakir Hussain) என்ற நபரை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் உயர் தரமான கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை Q பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( CID ) இந்த வழக்கை முதலில் பதிவு செய்தது. பின்னர், இது தேசிய புலனாய்வு முகவரமைப்பின் ஹைதராபாத் கிளைக்கு மாற்றப்பட்டது.
அமீர் சுபைர் சித்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுப்பது, போலியான அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சாகிர் ஹுசைன் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில், சித்திக் மீது தேசிய புலனாய்வு முகவரமைப்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி : The New Indian Express



