இலங்கையில் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவைக்கு ஐ. நா. வலியுறுத்தல்

இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி அறிக்கையொன்றைய வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் கதி என்னவென்று தெரியவில்லை’ என்றும் இது ‘மௌனம், செயலற்ற தன்மை மற்றும் தண்டனையின்மையால் ஏற்பட்ட ஒரு தேசிய காயம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்புக்குரியவரைப் பற்றிய பதில்கள் இல்லாமல் விடப்படும் வலி, காலத்தால் மட்டுமே குணப்படுத்த முடியாத ஒரு அதிர்ச்சி என்றும் ‘உண்மை மற்றும் நீதி இல்லாததால் துன்பம், ஆழமடைகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

சர்வதேச காணாமல் போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக் கூடுகளும், எச்சங்களும் நம்பகமானதும், வெளிப்படையானதுமான சுயாதீன விசாரணைகளுக்கான அவசர தேவையை நினைவூட்டுகிறது. உண்மைகளை வெளிக்கொணர்வது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நெருக்கமான சூழலை ஏற்படுத்த உதவும்.

நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன அதற்கு முன்நிபந்தனையாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவலை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து உண்மையை வெளிக்கொணர்வது ஒரு அடிப்படை உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.

மனித புதைகுழி தொடர்பில் விசாரிக்க அவர் விடுத்த அழைப்பு, கடந்த காலத்தை தைரியத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவை வழங்குகிறது.

இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும், தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் குற்றச்சாட்டப்படுகின்றனவர்கள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருப்பதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.