பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒன்றிணைத்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
‘பருத்தித்துறை நகரை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் நிறைவாக மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நகர்ப் பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களால் பருத்தித்துறை நகரின் வளர்ச்சி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடமாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நீதவான் வாசஸ்தளத்திற்கான நீதிமன்ற காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளனர் என்று பேரணியை முன்னெடுத்த தரப்பினர் சுட்டிக்காட்டினார்.குறித்த முகாம் அகற்றப்பட வேண்டும் என்றும் அந்த முகாம் அகற்றப்பட்டால் நீதிமன்ற இடமாற்றம் தேவையற்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இரண்டாவதாக பருத்தித்துறை தபாலகத்தின் காணியையும் இராணுவம் முகாமிட்டுள்ளது.
தபாலகம் வாடகை கட்டடத்தில் இயங்க வருகிறது. அத்துடன் பருத்தித்துறை வெளிச்ச வீட்டு வளாகத்தில் கடற்படை முகாமிட்டுள்ளது என்று பேரணியை முன்னெடுத்த தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்
அதேநேரம் குறித்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட வர்த்தகர்கள் முற்பகல் 09:30 வரை தமது வர்த்தக நிலையங்கள் பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.சந்தை வியாபாரிகளும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.