‘நீதியின் ஓலம்’ போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ‘நீதியின் ஓலம்’ என்ற கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ்.செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில், கிருசாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்ட செம்மணி பகுதியில் ஆரம்பமானது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஏற்பாடுக்குழுவினர் போராட்டத்தின் நோக்கம் குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன்படி, தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்படுகிறது.