வடக்கு மற்றும் கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்களை முன்வைத்தே, நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இதற்கும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
வடக்கு கிழக்கில் தற்போது உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த காணிகளை அரசு வேறு பணிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வழங்க முடியும் என்றும் அவ்வாறானதொரு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.
இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை இருப்பதானாலேயே, 200 பேர் இருந்த இராணுவ முகாம்களில், இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை 25ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, சுமார் 7 முதல் 8 மாதங்களாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.