தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த வகையில் மேலும் சில பொருட்களுக்கான வரியை எதிர்காலத்தில் குறைத்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில பொருட்களுக்கான அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் தீர்வை வரி இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவுக்கு வருடத்துக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. அதேவேளை 450 பில்லியன் டொலருக்கு இறக்குமதிகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் அதேவேளை, சர்வதேச சந்தைக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்த வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.
கடந்த மாதங்களில் ஏனைய பிராந்தியங்களுக்கும் எமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 58 சதவீதமாகவுள்ளன. கடந்த 6 மாதங்களில் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன.
அத்தோடு எதிர்காலத்தில் இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்களுக்கு தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை. அந்த வகையில் சில பொருட்களுக்கான தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். மேலும் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.