நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை.
இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினரின் வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இராணுவத்தின் அத்துமீறல் இன்னமும் தொடர்கிறதா என பெருமளவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.