நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதி கோரியும், தமிழருக்கான நீதியை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் சனிக்கிழமை (26) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன்,வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் செம்மணி மனித புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.