சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்துக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு வேளையின்போது, டில்வின் சில்வா குறிப்பிடுகையில்,

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதிபெற்றுள்ளதாகவும், அதைப்போலவே, நான் உட்பட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சீனாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சே துங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக கட்சியானது செயற்பட்டுள்ள விதம் பற்றியும் கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என்பதையும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.