இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இலங்கை கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளையும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்றநிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய பதற்றங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, அவ்விரு நாடுகளிலும் உள்ள இலங்கைத்தூதரகங்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

அத்தோடு அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளிடமும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்றநிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளது.