தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவேந்தல்…

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவுதினம் இன்று (5) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பொன் சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் ஆவார்.

அதனால்  காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்டபோது சயனைட் உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் உட்கொண்டு உயிர் நீத்தவர் பொன் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நினைவு நாளையே தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.