முன்னிலை வகிக்கின்ற சபைகளில் ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் : தமிழரசு கட்சி வலியுறுத்தல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில் அந்த சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள கட்சியின் மாவட்டக்கிளை அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் 3மணிக்கு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாணக்கியன், கலையரசன், சத்தியலிங்கம், குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கரைச்சி, பூநகரி, புதுக்குடியிருப்பு, மற்றும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு ஆகிய சபைகளில் மட்டுமே அறுதிப்பெரும்பான்மையை தமிழரசுக்கட்சி கொண்டிருக்கின்றது. இந்நிலையில், ஏனைய சபைகளில் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றுவது என்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த எம்.ஏ.சுமந்திரன், பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அமைப்பதற்குரிய ஒத்துழைப்புக்களை ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் வழங்க வேண்டிய தார்மீக கடமையைக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

அந்த வகையில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு குறித்த சபைகளில் எமது கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்மொழியப்படவுள்ளனர் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெறாத சபைகளில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கும் பட்சத்தில் அக்கட்சிகள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.