இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களை கருத்திற் கொண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார்.
அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதிலும் முழுமையாக கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார்.
பாராளுமன்றில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, புதிய அரசியலமைப்பு எப்போது உருவாக்கப்படும் என்பதை அவைக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டது.
இது, தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய அரசாங்கம் தற்போது பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்த மாதம் மற்றொரு தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலும் பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறாமல் உள்ளது.
‘மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றவுடன், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் ஆரம்பிக்கும்’ என்று பிரதமர் குறிப்பிட்டார். ‘தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு பாதீட்டுத் திட்டத்தில் புதிய யாப்பு உருவாக்க செயல்முறைக்கு நிதி ஒதுக்கவில்லை’. எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு செயல்முறையை தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகள் மூலம் தொடர விரும்புவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்.எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நியாயமானதொரு காலக்கெடுவிற்குள் நிறைவுசெய்யப்படலாம் என்று தான் கருதுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்