கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்தை தோண்டும் பணி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை குற்றவிசாரணை புலனாய்வு பிரிவும், கொழும்பு குற்ற விசாரணை புலனாய்வு பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

நேற்று திருகோணமலை குற்றவிசாரணை புலனாய்வு பணியக பிரிவு, கிண்ணியா பொலிஸ் ஊடாக, நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட AR 155/2025 வழக்கின் பிரகாரம், நீதவான்
கே. ஜீவராணியினால் நிலத்தை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியே இது எனவும் பெரிய வருகின்றது. இக்காலப் பகுதியில், பொது மக்களின் குடியிருப்பு பிரதேசமாக காணப்பட்டது. யுத்த சூழ்நிலை உக்கிரமடைந்தபோது 1990 ஆம் ஆண்டு கடைசி பகுதியில் அங்கிருந்து மக்கள் வெளியேறினார்கள்.

மீண்டும் 2011 ஆம் ஆண்டு பொதுமக்கள் இங்கு மீள்குடியேறி, இன்று வரை அந்தப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொழும்பு குற்ற புலனாய்வு பணியாக பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து, நேற்று(3) அவ்விடத்திற்கு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் வருகை தந்தனர். இதனை அடுத்து அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே, இன்று (4) அவ்விடத்தை தோண்டும் நடவடிக்கை பகல் 1. 45 மணி வரை சுமார் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டும், ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இதன் காரணமாக, தோண்டப்பட்ட இடம், மீண்டும் மண் போட்டு நிரப்பப்பட்டது.