மீனவர் விவகாரம்: இந்தியா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர்  விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதி தூதுவர் சத்தியஞ்சல் பாண்டேக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது, அமைச்சர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும்   இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி  தூதுவர் கூறும்போது, ஆம், மனிதாபிமான முறையிலேயே அணுகுகின்றோம், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார்.

அதேபோல பெரும்பாலான மீனவர்கள் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தால் திரும்பி செல்கின்றனர் எனவும், ஒரு சிலரே அத்துமீறுகின்றனர் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக தமிழகத்திலுள்ள பணபலம் படைத்த முதலாளிமார், அரசியல்வாதிகள் மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்த முற்படுகின்றனர் எனவும், தமது வாழ்வாதாரம் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக்கின்றனர் எனவும், வடக்கு மீனவர்களின் நிலை பற்றி சிந்திப்பதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை வடக்கு மீனவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கியது. அதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மதித்து, நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு தமது தரப்புக்கு உள்ள விடயத்தையும் அமைச்சர் மேற்படி சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.