இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் – ஆராய்வதற்கு மூவரடங்கிய குழுவை நியமித்த சபாநாயகர்

‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பாராளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்படும்’ என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாகவும்’ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) சபையில் அறிவித்தார். அதன்படி, குழுக்களின் பிரதி தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமையிலான இந்த குழுவில் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன்படி, ‘குறித்த குழுவின் அறிக்கை பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்பப்படும்’ என்று சபாநாயகர் அறிவித்தார். குறித்த அறிக்கையை ஆராய்ந்து, பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் பற்றிய குழு, இராமநாதன் அர்ச்சுனா மீதான முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். தங்களது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.