இலங்கையில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைத்திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியது.

இலங்கையில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளரால், இலங்கை முதலீட்டு சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

484 மெகாவோட் மின்னுற்பத்திக்காக மன்னார் மற்றும் பூநகரியில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கும், அதன் சேவையை தென்னிலங்கையில் விஷ்தரிப்பதற்கான மேலும் இரண்டு மின்மையங்களை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் அதானி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்தது.

இதுதொடர்பாக 14 சுற்று பேச்சுவார்த்தைகளை அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் நடத்தியதாக, அந்த நிறுவனம், இலங்கை முதலீட்டு சபைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி மையத்துக்கு எதிரான வழக்கு மற்றும் சுற்றாடல் அறிக்கையைத் தவிர்த்து ஏனைய அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டன. வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்காக 5 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடப்பட்டுள்ளது. எனினும் மின்னுற்பத்தி வேலைத்திட்டம் குறித்து மீண்டும் மீளாய்வு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக சபையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு இருக்கின்ற இறைமையை முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ள அதானி நிறுவனம், கௌரவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்வதாகவும் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அதானி நிறுவனம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.