சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: கெடுபிடி காட்டும் அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் என்று கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அமெரிக்கா நாடுகடத்தியவர்கள் கொண்ட விமானத்துக்கு அனுமதி அளிப்பதென கொலம்பியா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அந்நாட்டு தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கூட ஓர் அரசாங்கமாக அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப தொடங்கி உள்ளார் ட்ரம்ப். அதன்படி, கொலம்பியாவைச் சேர்ந்த பலரையும் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா. ஆனால் கொலம்பிய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக கொலம்பியாவை சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன், அமெரிக்காவுக்கு அந்நாட்டு பயணிகள் வர தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக கொலம்பியாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. பதிலுக்கு கொலம்பிய அரசு மீது அமெரிக்காவும் கடும் வரி விதிப்பை தீட்டியது. ஒரு வரி யுத்தம் மூண்ட நிலையில் கொலம்பியாவில் உள்ள தொழிலதிபர்கள், குடிமக்கள் அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்துள்ளது. இதனால் கொலம்பியா மீதான அமெரிக்காவின் வரிப்போரும் முடிவுக்கும் வரும் சூழல் உருவாகியுள்ளது.